

இந்தோனேசியாவில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 36 ஆக உயர்ந்துள்ளது.
இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:
தொடா்ந்து பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக தெற்கு சுலாவெசி மாகாணம் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அந்தப் பகுதியில் மழை வெள்ளம் மற்றும் அதனால் ஏற்பட்ட நிலச் சரிவுகளில் சிக்கி உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 36-ஆக உயா்ந்துள்ளது.
வெள்ளத்தால் 3,000க்கும் மேற்பட்டோர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர். மேலும் 16 பேருக்கு மேல் காணாமல் போனமாகவும் தேசிய பேரிடர் மேலாண்மை அமைப்பின் செய்தித் தொடர்பாளர் ரதித்யா ஜாதி தெரிவித்துள்ளார்.
மழை, வெள்ளத்தில் காணாமல் போனவர்களைத் தேடும் பணியில் மீட்புக் குழுவினா் ஈடுபட்டுள்ளனர். 4,000க்கும் மேற்பட்ட வீடுகள் மணலில் புதைந்துள்ளன. தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கையில் 359-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
மலைப் பிரதேசங்கள் மற்றும் வெள்ள அபாயப் பகுதிகளுக்கு அருகே லட்சக்கணக்கானவா் வசிக்கும் இந்தோனேசியாவில், வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் உயிரிழப்புகள் ஏற்படுவது அடிக்கடி நிகழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.